"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Sunday, December 11, 2011

மாவீரன் அலெக்சாண்டர்

"இந்த கல்லறையில் உறங்குபவன் உலகையே வென்றவன் என்று பொறித்து விடுங்கள். ஆனாலும் போகும்போது எதையும் எடுத்து செல்லவில்லை என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் என் இறுதி ஊர்வலத்தின் போது என்கைகள் வெளியில் தெரியும்படி கொண்டு செல்லுங்கள்."
- [அலெக்சாண்டர்]

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசர். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினார். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தார். ஆனால், கிரீசுக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானார். தனது பணம், படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவர் உணர்ந்த அந்த நிமிடம் மரணத்தின் அழைப்பை உணர்ந்து அவது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தார்.

1, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

2, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவர் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை கற்களை புதைக்க வேண்டும்.

3, அவர் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவர் சொன்ன காரணங்கள்...
"இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்"
முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...
"இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".
இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...
"எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".
மூன்றாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...
"வெறுங்கையோடு வந்தேன், வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

வரலாற்றுச்சுருக்கம்
பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராக திகழ்ந்தவர் மகா அலெக்சாண்டர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.
மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தை திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர் அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப்பகுதிகளை வெல்வதற்கு இந்தப்படையைப் பயன்படுத்தினார். பிறகு தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். தொடர்ந்து கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார்.
அந்தக் கூட்டாட்சிக்குத்தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப்பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். கி.மு.336ஆம் ஆண்டில் அந்தப்படையெடுப்பு தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாண்டருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும் அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாண்டருக்கு தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாண்டர் கணிசமான அளவுக்கு போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக்கல்வி அளிப்பதிலும் ஃபிலிப் கவனக்குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்க பேரறிஞராகிய அரிஸ்டாட்டில் ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி அலெக்சாண்டருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.
கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக்கருதினார். ஆயினும் அலெக்சாண்டர் தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வசப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார். மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய வலிமை வாய்ந்த, செல்வச்செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது. அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத்தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாண்டர் தமது படையின் ஒரு பகுதியைத்தாயகத்திலேயே விட்டுவிட்டு செல்ல வேண்டியிருந்தது. இதனால் அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத்தொடங்கியபோது அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக்குறைவாக இருந்தது. அலெக்சாண்டரின் படை பாரசீகப்படையைவிட சிறியதாக இருந்தபோதிலும் அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது.
அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக ஃபிலிப் மன்னர் விட்டுச்சென்ற இராணுவம் பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக அலெக்சாண்டர் மகத்தான இராணுவத்திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத்திகழ்ந்தார் என்றுகூடக்கூறலாம். மூன்றாவதாக அலெக்சாண்டர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக்கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாண்டரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்கு தாமே நேரடியாகத்தலைமைதாங்கி போரிடுவதை தமது கொள்கையாக கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால் அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால் அவரது படையினர் தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற்கொள்ளத்தயங்கும் அபாயத்தை ஏற்கும்படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது. அலெக்சாண்டர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாக செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப்படைகளை தோற்கடித்தார். பிறகு, வடக்குச்சிரியாவுக்குள் நுழைந்து இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப்படையை படுதோல்வியடையச்செய்தார்.
அதன் பின்பு அலெக்சாண்டர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப்படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக்கடினமான ஏழுமாத முற்றுகைக்குப்பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாண்டர் முற்றுகையிட்டுக்கொண்டிருந்தபோது அலெக்சாண்டருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக்கொடுத்துவிட தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாண்டருக்கு தூது அனுப்பினார். டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாண்டர் தொடர்ந்து தெற்கு நோக்கிச்சென்றார்.
இருமாத கால முற்றுக்கைக்குப்பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர் அலெக்சாண்டர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது 24 வயதே ஆகியிருந்த அலெக்சாண்டர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக்கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் தம்படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு.331ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரு பெரிய பாரசீகப்படையை அவர் முற்றிலுமாகத்தோற்கடித்தார். ஆர்பெலா வெற்றிக்குப்பிறகு அலெக்சாண்டர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத்தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர் அலெக்சாண்டரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதை தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும் அலெக்சாண்டர் டரையசுக்குப்பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத்தோற்கடித்து அவரைக்கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப்படுத்தினார். பின்பு மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார். இப்போது பாரசீகப்பேரரசு முழுவதும் அலெக்சாண்டருக்கு அடிமைப்பட்டுவிட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி புதிய ஆட்சிப்பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் நாடுகளைப்பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச்சென்றார். அங்கிருந்து அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத்தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க முனைந்தார்.
ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டு களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்துச்செல்ல மறுத்தனர். அதனால் அலெக்சாண்டர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார். பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச்செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப்பணியாக விளங்கியது. கிரேக்கப்பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாண்டர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக்கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாண்டர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள் தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால் அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிக கூட்டுப்பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராக தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக்கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான உரிமைகளை பெற்று வாழ மனதார விரும்பியதாகத்தோன்றுகிறது. தமது இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக்கொண்டார்.
கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனிய படை வீரர்களுக்கும் ஆசியப்பெண்களுக்கும் மணம் முடிக்கப்பெற்றது. அலெக்சாண்டர் கூட தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்த போதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத்திருமணம் செய்து கொண்டார். மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக்கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாண்டர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத்திட்டமிட்டிருந்தார். பாரசீகப்பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும் ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323ஆம் ஆண்டு ஜூன் மாதத்தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாண்டர் திடீரென காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை. அலெக்சாண்டர் தமது வாரிசை நியமித்துவிட்டுச்செல்லவில்லை. அவர் இறந்ததும் அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாண்டரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அலெக்சாண்டர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால் அவர் உயிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரோப்பாவின் வரலாறு முழுவதும் முற்றிலும் வேறாக அமைந்திருக்கலாம். ஆனால் அலெக்சாண்டரின் உண்மையான செல்வாக்கினை மதிப்பிடுவதற்கு இத்தகைய ஊகங்களால் ஒரு பயனுமில்லை. அலெக்சாண்டர் வரலாற்றில் மிகவும் வியக்கத்தக்க மனிதராக விளங்கினார். அவருடைய வாழ்வும், ஆளுமையும் கவர்ச்சிமிக்கதாக இருந்தது. அவருடைய வாழ்வின் உண்மை நிகழ்ச்சிகள்கூட வியப்புக்குரியதாகவே உள்ளன. அவருடைய பெயரால் எத்தனையோ கட்டுக்கதைகள் புனையப்பெற்றன. வரலாற்றிலேயே தலைசிறந்த போர் வீரனாக விளங்க அவர் வேட்கை கொண்டார். மாபெரும் வெற்றி வீரன் பட்டத்திற்கு அவர் முற்றிலும் தகுதியுடையவராக திகழ்ந்தார். தனிப்பட்ட போர் வீரன் என்ற முறையில் அலெக்சாண்டர் திறமை, அஞ்சா நெஞ்சம் ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த உருவமாக விளங்கினார். தளபதி என்ற முறையில் அவர் ஒப்பற்றவராகத்திகழ்ந்தார். பதினொராண்டுகள் அவர் போரில் ஈடுபட்டிருந்தார். ஆனால் ஒரு போரில்கூட அவர் தோல்வி கண்டதில்லை. அதே சமயத்தில் அலெக்சாண்டர் ஒரு தலைசிறந்த அறிவாளியாகவும் விளங்கினார். பண்டைய உலகின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞரும், தத்துவ ஞானியுமாகிய அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி பயின்றார். ஹோமரின் கவிதையை பொன்போல் போற்றினார்.
கிரேக்கர் அல்லாதவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அவர் உணர்ந்து கொண்டதும் அவர் தம் காலத்திய பெரும்பாலான கிரேக்க சிந்தனையாளர்களைவிட அதிக பரந்த நோக்குடன் நடந்து கொண்டார். ஆனால் மற்ற வழிகளில் அவர் மிகுந்த குறுகிய நோக்குடன் நடந்தது வியப்பளிக்கிறது. போர்க்களத்தில் அவர் அடிக்கடி அபாயங்களை ஏற்றார் என்ற போதிலும் அவர் தமக்கு ஒரு வாரிசை நியமிப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து விட்டார். அவ்வாறு வாரிசை நியமிக்க அவர் தவறியதுதான் அவரது மரணத்திற்கு பிறகு, அவருடைய பேரரசு விரைவாக உடைந்து சிதறுண்டு போனதற்கு பெரிதும் காரணமாகும். அலெக்சாண்டர் கவர்ச்சியான தோற்றமுடையவராக இருந்தார். அவர் மிகுந்த சமரச மனப்பான்மையுடன் நடந்து கொண்டார். தாம் தோற்கடித்த பகைவர்களிடம் கருணை காட்டினார். அதேசமயம், அவர் ஆணவம் கொண்டவராகவும், எளிதில் ஆத்திரங்கொள்ளும் முரட்டு குணமுடையவராகவும் இருந்தார். ஒரு சமயம் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தம் உயிரை ஒருமுறை காப்பாற்றிய கிளைட்டஸ் என்ற ஆரூயிர் நண்பனையே இவர் கொன்று விட்டார். நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரைப்போன்று, அலெக்சாண்டர் தமது தலைமுறையினர் மீதே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். ஆனால், அவரது குறுகிய காலச்செல்வாக்கு அவர்களுடையதைவிட குறைவாகவே இருந்தது. அவர் காலத்தில் பயணம் மற்றும் செய்திப்போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக இருந்தமையால், உலகின் மிகக்குறுகிய பகுதிக்கே அவருடைய செல்வாக்கு சென்றது.
அலெக்சாண்டரின் படையெடுப்புகளினால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளில் மிக முக்கியமானது, கிரேக்க நாகரிகத்தையும், மத்திய கிழக்கு நாகரிகத்தையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகவே தொடர்பு கொள்ள செய்து, அதன் வாயிலாக இரு பண்பாடுகளுக்கும் வளமூட்டியதாகும். அலெக்சாண்டரின் ஆயுட்காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்பும், உடனடியாக ஈரான், மெசொப்பொட்டோமியா, சிரியா, ஜூடியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிரேக்கப்பண்பாடு விரைவாகப்பரவியது. அலெக்சாண்டருக்கு முன்பு இந்த மண்டலங்களில் கிரேக்கப்பண்பாடு மிகவும் மெதுவாகவே நுழைந்து வந்தது. மேலும், கிரேக்கப்பண்பாட்டை அது எப்போதும் எட்டாதிருந்த இந்தியாவில், மத்திய ஆசியாவிலுங்கூட அலெக்சாண்டர் பரப்பினார். பண்பாட்டுச்செல்வாக்கு என்பது எந்தவகையிலும் ஒரு வழிப்பாதை அன்று. அலெக்சாண்டர் வாழ்ந்த காலத்துக்கு அடுத்து பிந்திய நூற்றாண்டுகளில், கீழை நாடுகளின் கொள்கைகள் முக்கியமாகச் சமய கொள்களைகள் கிரேக்க உலகில் பரவின.
பெரும்பாலும் கிரேக்க அம்சங்களும், வலுவான கீழை நாட்டுச்செல்வாக்குகளும் இணைந்த இந்தக் கலப்புப்பண்பாடுதான் இறுதியில் ரோமாபுரியைப் பாதித்தது. அலெக்சாண்டர் தமது ஆட்சிக் காலத்தின்போது, இருபதுக்கும் அதிகமான புதிய நகரங்களை நிறுவினார். இவற்றுள் மிகவும் புகழ்பெற்றது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியாவாகும். இந்த நகரம் விரைவிலேயே உலகின் முன்னணி நகரங்களுள் ஒன்றாகவும், தலைசிறந்த பண்பாட்டு கல்வி மையமாகவும் முன்னேற்றமடைந்தது. ஆஃப் கானிஸ்தானிலுள்ள ஹிராத், கண்டஹார் போன்ற வேறு சில நகரங்களும் முக்கியமான நகரங்களாக உருவாகின. ஒட்டுமொத்தமான செல்வாக்கில் அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையவர்களாகத் தோன்றுகிறது. அலெக்சாண்டரின் குறுகியச் செல்வாக்கு, மற்ற இருவருடைய செல்வாக்கை விடக்குறைவு. ஆனால், அந்த இருவருடைய செல்வாக்கும், அலெக்சாண்டரின் செல்வாக்கைவிட மிகக்குறைந்த காலமே நீடித்தது. அந்தக் காரணத்துக்காகவே, அலெக்சாண்டர், மற்ற இருவருக்கும் சற்று முன்னதாக இடம்பெற்றிருக்கிறார். வரலாற்றிலும் வேறுபட்ட மனிதராக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.
Photobucket

1 comment: