"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Tuesday, November 30, 2010

கீரிமலை நகுலேச்சரம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் முழு முதற் கடவுகளாகப் போற்றப்படும் சிவனுக்கு ஈழமெங்கும் பல ஆலயங்கள் இருந்ததை நாம் அறிகிறோம். ஈழத்திலுள்ள ஈச்சரங்க்களுள் ஒன்றாகவே கீரிமலை நகுலேச்சரமும் விளங்குகிறது. அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவன் கோவில்களில் கீரிமலை சிவன் கோவிலே மிகவும் பழைமையானதாகும். இவ்வரலாற்று சிறப்புப் பெற்ற கோவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறை ஆகிய மூன்று கிராமங்களும் உள்ளடங்கிய பிரதேசம் 'கோயிற் கடவை' என்ற பெயரால் சிறப்பாக அழைக்கப்பட்டு வந்தது.


இக்கோவில் ஆதி காலத்தில் நகுலேஸ்வரம், திருத் தம்பலேஸ்வரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. 'விஜயன் தனது அரசாட்சியை ஆரம்பிக்கும் முன்னர், தன் அரசுக்குப் பாதுகாப்பாக நான்கு திக்கிலும் நான்கு சிவாலயங்களை எழுப்பினார்' என யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது.


வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதியில் நாக இனத்தவர்களில் இராசதானியாக விளங்கிய கதிரமலை என்ற இடமே தற்போது கந்தரோடை என அழைக்கப்படுகிறது. நாக அரசர்களுடன் நட்புக் கொண்ட விஜயன், வட பகுதிக்குப் பாதுகாப்பாக கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பகுதியில் திருத்தம்பலேசுவரன், திருத்தம்பலேசுவரி கோவிலைக் கட்டினான். மேலும் காசியிலிருந்து வாமதேசாசாரியன் என்னும் பிராமணரையும் இங்கு வரவழைத்து கோவில் பூசை கடமைகளையும் செய்வித்தான் எனவும் இக்கோவில் காணப்பட்ட கிராமத்திற்கு கோவிற் கடவை என்ற சிறப்புப் பெயர் உண்டானது எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இச்சிவாலயம் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளதை புராண வரலாறுகளும் ஐதீகங்களும் எமக்கு விளக்கியுள்ளன. பல்வேறு காரணங்களால் காலத்துக்குக் காலம் ஆலயங்கள் அழிக்கப்பட்டதை நாம் அறிகிறோம். எனவே அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயத்தை விஜயன் மீளக் கட்டியிருக்கலாமேயன்றி புதிதாக ஆலயத்தைக் கட்டினான் என்பதை ஏற்க முடியாது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.


திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகிய ஆலயங்கள் எவ்வளவு பழைமையானதோ, அத்தகைய பழைமை கொண்ட ஆலயம்தான் நகுலேஸ்வரம் என்பது பொதுவான கருத்தாகும். கி. மு. 1500 வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் அரசாண்ட பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு புண்ணிய தீர்த்த தலமான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் என்ற மகாபாரதக் குறிப்பில் இருந்து நகுலேஸ்வரம் என்ற தலத்தின் தொன்மையை நாம் அறியலாம்.


நகுல முனி என்பவர் சாபம் காரணமாக தான் பெற்ற கீரிமுகத்தை நீக்குவதற்காக கோவிற் கடவை மலைச்சாரலில் தங்கியிருந்து அங்கிருந்த புனித தீர்த்தத்தில் நீராடி தன் முகத்தில் இருந்த குறை நீங்கப் பெற்றார் என்பது வரலாறு ஆகும். இக்காரணத்தாலே அவர் தங்கியிருந்த இடத்திற்கு கீரிமலை என்ற பெயர் வழங்கப்பட்டது. இச் சம்பவத்தின் பின்னர் திருத்தம்பலேசுவரர் கோவில் 'நகுலேசர் கோவில்' என்றும் திருத் தம்பலேசுவரி கோவில் 'நகுலாம்பிகை' கோவில் எனவும் வழங்கப்பட்டது என யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது.


கீரிமலைத் தலத்தின் சிறப்பை மாருதப் புரவீகவல்லியின் வரலாற்றிலும் நாம் காணக் கூடியதாக உள்ளது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான மாருதப் புரவீக வல்லிக்கு குன்ம நோய் காரணமாக குதிரை முகம் பெற்று காணப்பட்டாள். இதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மாருதப்புரவீக வல்லிக்கு 'மருந்துகள் எதுவும் பயன்தராது. தீர்த்த யாத்திரையின் மூலமே சுகமடைவாய்' என சந்நியாசி ஒருவர் கூறினார்.


மேலும் 'இலங்கையின் வடமுனையில் கீரிமலை என்றொரு மலையுண்டு. அங்கே உவர்ச்சல் மத்தியில் சுத்த தீர்த்தமும், மலையருவித் தீர்த்தமும் கலந்த உத்தம தீர்த்தம் ஒன்று உண்டு. அப்புனித தீர்த்தத்திலே நீராடினால் சுகம் பெறுவாய்' எனக் கூறினார். அவர் வாக்கை அருள் வாக்காகக் கொண்டு புறப்பட்டு வந்த மாருதப் புரவீக வல்லி, கீரிமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு வணங்கி, தன் சாபம் பற்றிக் கூறினாள். நகுல முனிவரும் தல மகிமை, தீர்த்த விசேடம் ஆகியவற்றை அவளுக்கு எடுத்துக் கூறி, தன் கீரி முகம் மாறிய அற்புதத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மாருதப் புரவீக வல்லி அங்கு தங்கியிருந்து தீர்த்தமாடி, சிவாலய தரிசனம் செய்து குன்ம நோய் நீங்கி, குதிரை முகம் மாறி, அழகிய பெண்ணானாள். அவள் தான் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் கந்த வேளுக்கு ஒரு ஆலயம் அமைத்தாள் என்றும் அவ்வாலயமே 'மாவிட்டபுரம்' கந்தசாமி கோவில் என்றும் வரலாறு கூறுகின்றது.


ஆனாலும் நகுலேஸ்வரத்தின் மிகப் பழைமையான கோவில் கடலில் அமிழ்ந்து விட்டது. இரண்டாவது கோவில் போர்த்துக் கேயரால் தரை மட்டமாக்கப்பட்டது. மூன்றாவது கோவில் போரில் சிதைவடைந்து தற்போது புதுப்பிக்கப்படுகிறது என்றொரு கருத்தும் உண்டு. முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோவில் கடற்கரையில் உள்ள மலையில் இருந்ததாகவும் கடற்கோள் ஒன்று ஏற்பட்ட போது அக்கோவில் கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது கி. பி. 1621 ஆம் ஆண்டளவில் இரண்டாவது ஆலயம் முற்றாக தரை மட்டமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் வழிகாட்டலில் கி. பி. 1878 ஆம் ஆண்டு மூன்றாவது கோவில் கட்டப் பெற்றதாகவும் நாம் அறிகிறோம். கி. பி. 1878 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் கீரிமலைக் கோவில் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை நாவலர் வெளியிட்டார். அத்துண்டுப் பிரசுரத்தில் மேற்கூறப்பட்ட வரலாறு கூறப்பட்டுள்ளதுடன் கீரிமலையில் ஒரு சிவன் கோவிலை கட்டுவதற்கு பொது மக்களிடம் இருந்து பொருளுதவியும் கோரப்பட்டுள்ளது. கீரிமலை சிவாலயம் உருவாவதற்கு முன்னர் நாவலர் சிவபதம் அடைந்தாலும் அவருடைய வேண்டுகோளை ஏற்ற சைவ மக்கள் அப்பணியை நிறைவேற்றினர்.


நகுலேஸ்வரம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் மூன்று பிரகாரங்களும் ஐந்து கோபுரங்களும் கொண்ட மிகப் பெரிய ஆலயமாக விளங்கியுள்ளது. ஆனாலும் தற்போது உள்ள ஆலயம் சிவாகம விதிகளுக்கும் சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமையவே உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான நிலப்பரப்பு முருங்கை கற்பாறையின் மேலே காணப்படுகிறது. மேலும் வட கடற்கரையில் நிலத்தில் இருந்து கடலுக்குள் பாயும் பல அருவிகள் உண்டு. இக் கருவிகளுள் முக்கியமான அருவியாக கீரிமலை அருவி போற்றப்படுவதுடன் மிகப் பரிசுத்தமானதாகவும் கருதப்படுகிறது.


'Ancient Hindu Temples of Sri Lanka' என்ற நூலின் ஆசிரியரான திரு எஸ். ஆறுமுகம் அவர்கள் தனது நூலில் '....... The spring water how to Keerimalai is of great value and barhing in its waters imports therapeutic medicinal benefit to the human body. From its source in the rocks of Tellipallai - Maviddapuram (30 feet elevation) area, the spring waters flowing through the crecvices and fissures of the carbonated rocks, encountering tea water as it emerges at Keerimalai, acquire chemical values and minute electrolyt. ic charges, which tonic the functioning of the human syste' என்று குறிப்பிட்டுள்ளமை கீரிமலையிலுள்ள புனித தீர்த்தத்தின் பெருமையை எடுத்துரைப்பதாக உள்ளது.


பூஜை முறைகள் இவ்வாலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய வழிபாடுகள் சிவாகம முறைப்படி நடைபெறுவது வழக்கமாகும். இங்கு திருப்பள்ளி எழுச்சி தொடக்கம் அர்த்த சாமப் பூ
சை வரை நாள்தோறும் ஆறு கால பூசை நடைபெறுகின்றது. ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக சில காலம் பூசை வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் மூல மூர்த்திக்கு திருமணமான சிவாச்சாரியார்களே பூசை செய்யும் மரபு இன்றும் இக்கோவிலில் உண்டு.

திருவிழாக்கள் கீரிமலைச் சிவன் கோவிலின் வருடாந்த உற்சவம் மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி அமாவாசை தினத்தன்று தீர்த்த உற்சவம் நிகழும். அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் கொடியேற்றம் நடைபெறுவதுடன் சித்திரை வருடப்பிறப்பு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். மேலும் மாதந்தோறும் நடைபெறும் சோம வாரம், மாதப் பிறப்பு, வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், மானம் பூ, ஆவணி உத்தரம், கார்த்திகை விளக்கீடு, புரட்டாதிச் சனி, திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாசல், ஏகாதசி போன்ற பல்வேறு விரதங்களும் விழாக்களும் இங்கு சிறப்புற நடைபெறுவதுண்டு.


வழிபாட்டிலே சிவ வழிபாடு சிறப்புப் பெற்ற வழிபாடாகக் காணப்படுகிறது. சிவம் என்பதற்கு மங்கலம், சுபம், நன்மை, பேரானந்தம், உண்மை, மேன்மை என பல பொருள்கள் கொள்ள முடியும். ஆகவே உடற் பிணி, உளப் பிணி இரண்டையும் ஒருங்கே அழிக்கவல்ல கீரிமலைச் சிவன் கோவில் வரலாற்றில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இவ்வாறான சிறப்பு பெற்ற தலம் இன்று உள்ள நிலை கவலைக்கிடமானதாகும். பெரும் அழிவுக்கு உள்ளாகியிருக்கும்  இதனை புனரமைக்க ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.   
இவ்வளவு புனிதமான கேணியில் பாதணிகளுடன் இறங்குவதோ  சவர்காரம் பாவித்து குளிப்பதோ முற்றாக தடை செய்யப்பட்ட விடயமாகும். இதை அங்கு வரும்  சுற்றுலாப்பயணிகள் பின்பற்றுவதில்லை. அவர்கள் தாம் அணிந்து வந்த பாதணிகளைகூட புனித கீரிமலை கேணியில் கழுவுகின்றனர். இது அதன் புனித தன்மையை கெடுக்கும் செயலாகும். இதனை தடுக்க ஆலய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.ஆலய சூழலில் பெயரளவிற்கு அறிவுறுத்தல் பலகைகள் வைப்பது மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 

Saturday, November 27, 2010

யமுனா ஏரியும் மந்திரிமனையும்

யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணிஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது யாழ்ப்பாண அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கூழங்கை சக்கரவர்த்தியின் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலை, நல்லூர் நகரம் உருவாக்கப்பட்டது பற்றிக் கூறும்போது,
....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........
என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த பொழிந்த முருகை கற்களையும்,வெள்ளைக்கற்களையும் கொண்டு கட்டப்பட்ட கேணியையே ஆகும். யமுனாநதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.
 கோட்டைக்குரிய சுவர் அமைப்பு முறையிலே இவ்வேரியின் இறுதிவடிவம் ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இவ்வேரியிலுள்ள சேறுவாரி வெளியே எடுக்கப்பட்டபோது இலுப்பை மரத்தினால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய அம்மன் சிலை வெளிவந்தது. இவ் அம்மன் சிலையானது தற்போது யாழ் அரும்பொருளகத்தில் (அரும்பொருளகம் தற்போது உள்ள நிலை தொடர்பாக பின்னர் தனியே நோக்குவோம் ) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சங்கிலியன் தோப்பு மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகமொன்றினால் மந்திரிமனைக்கும் அந்த யமுனா ஏரிக்குமிடையே தரைக்குக் கீழாக அமைந்த சுரங்கப் பாதையொன்று புராதன காலத்தில் அமைந்திருந்தது என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. மந்திரிமனையின் பிற்சுவர் ஒன்றுடன் அவ்வாறமைந்த சுரங்கப்பாதையொன்றின் வாயில் மிக அண்மைக்காலம் வரைக்கும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வேரியைச் சுற்றி சில கட்டடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டி வேலைப்பாடுடைய சுண்ணாம்புச் சாந்தினால் ஆன தூண்கள் பழைய ஓடுகள்,பட்பாண்டங்கள் என்பன உறுதிப்படுத்துனின்றன.சிலர் இவ்விடத்தில் அரச மகளீர் குளிப்பதற்கான மண்டபங்கள் இருந்ததாகக் கருதுகின்றனர்.
"கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” என்னும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று  ஆதாரங்களை  பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.
யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது இந்த ”யமுனா ஏரி” தடாகம். புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.
யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளையோர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

அடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள "மந்திரிமனை".  இது ஓர் புராதன மாடி வீடு. பிரதான வாசலிலே அவ்வீடு பற்றி சாசனம் ஒன்று பழந்தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம். அதுவும் சிதைவடைந்தவாறேயுள்ளது.
முன்பு ஒரு முறை அங்கு ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்ததையும்  எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது . இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப்பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.
அதேபோல் யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள நுளைவாயில். சங்கிலியனின் தோப்பிற்கான வாயில்  இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள்.
இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இவை இன்று  திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றன.
இவற்றை பேணி பாதுகாக்க இன்றைய சூழலில், சமூக ஆர்வலர்கள், தொல்பொருள்துறை, மாநகரசபை என பலர் இருந்தும்  யார் முன்வருகிறார்கள்? 

Friday, November 26, 2010

பொப்பி மலரும் காந்தள் மலரும்

உலக நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீரர்களை வருடாவருடம்  நெஞ்சினில் நிறுத்தி நினைவுகூர்ந்து வருகிறன. அந்த வகையில் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீரர்களை நினைவு கூர்ந்துவருகின்றமை தெரிந்ததே.
முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில், ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்துபோக ஆட்சியை அரசு பொறுப்பேற்றது.
அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத்திசைமாறி நின்ற வேளையில் ஜேர்மனியின் மூன்று பிரதிநிதிகள், நேசநாடுகளின் தளபதியும் பிரான்சின் ஜெனரலுமான Foch என்பவருடன் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி அதிகாலை ஐந்து மணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு பகல் 11 மணி 11 நிமிடத்திற்கு அமுலுக்கு வந்தது.
சுமார் நான்கு ஆண்டுகள் நடந்த இடைவிடாத யுத்தமான முதலாம் உலகப் போர் முடிவடைந்த நவம்பர் மாதம் 11 திகதி பகல் 11 மணி 11 நிமிடத்தில், உலகப் போரிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட போர்களில் மாண்ட படைவீரர்களை பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இன்றுவரை நினைவு கூருகின்றனர்.
அந்த வகையில் நவம்பர் 11ம் திகதி நடைமுறைக்கு வந்த இச்சமாதான உடன்படிக்கை ஆரம்பத்தில் போர்நிறுத்த தினம் -Armistice day- என்றே அழைக்கப்பட்டது. எனவே இதை மக்கள் முழுமையான சமாதானம் வந்துவிட்டது என்றே கருதியிருந்தனர்.
பிரித்தானிய மக்களுக்கு கார்த்திகை 11 முக்கியத்துவம் பெறுகின்ற நாள். பொப்பி எனப்படும் சிவப்பு நிற மலர் இந்நாளின் நினைவு மலராகக் கொள்ளப்படுகின்றது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள Flanders Fields நகரத்திலும், பிரான்சிலும் இவ்வகைப் பொப்பி பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்துடன் பிரித்தானியாவை சேர்ந்த போர்வீரன் லெப்டினட் கேணல் Jone McCrae என்பவர் 1915ல் எழுதிய  

"Flanders Fields போர்க்களத்தில் பொப்பிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, சிலுவை அடையாளங்களுக்கிடையில் வரிசைவரிசையாகப் பூத்துக்குலுங்கும் பொப்பி பூக்கள் எங்களுடைய இருப்பை அடையாளங்காட்டுகின்றன" என்ற கவிதை வரிகளின் காரணமாகவே பொப்பிப்பூக்களை அந்நாட்டு மக்கள் தங்களின் கல்லறை மலர்களாக தெரிந்தெடுத்திருந்தனர்.


ஜோன் மக்ரீ எழுதிய வரிகள் இவைதான்-
“Flanders Fields போர்க்களத்தில் பொப்பி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. சிலுவை அடையாளங்களுக்கிடையே வரிசை வரிசையாக பொப்பி மலர்கள் எங்களுடைய இருப்பிடங்களை அடையாளம் காட்டுகின்றன. கீழே முழங்குகின்ற துப்பாக்கிச் சத்தங்களை காதுகளில் வாங்காது வானம் பாடிகள் பறக்கின்றன. நாங்கள் இறந்தவர்கள். சில நாட்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள். வாழ்ந்தோம், வீழ்ந்தோம். சூரிய உதயத்தை உணர்ந்தோம். சூரிய அஸ்தமனத்தின் ஒளியைக்கண்டோம். காதலித்தோம், காதலிக்கவும் பட்டோம். இப்போது Flanders Fields இல் கிடக்கின்றோம். எங்களுடைய சண்டையை பகைவனிடம் கொண்டு செல்லுங்கள். செயலிழக்கப்போகின்ற எங்கள் கைகளில் உள்ள விளக்கை உங்களிடம் தருகின்றோம். இதனை உங்களுடையதாக உயர்த்திப்பிடியுங்கள். இறந்துகொண்டிருக்கும் எங்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைப்பீர்களானால் நாங்கள் தூங்கப் போவதில்லை. ஆனால் இந்தப் பொப்பி மலர்கள் தொடர்ந்து பூத்துக்குலுங்கும்”.


இதுவரை பொப்பி மலரினதும் பொப்பி தினத்தினதும் முக்கியத்துவம் பற்றி நோக்கினோம். இனி இதே கார்திகை மாதத்தில் தமிழர்கள் வரலாற்று விழுமியம் கொண்ட கார்த்திகைப்பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரை தமது நினைவு மலராக கொண்டாடுகின்ற சிறப்பம்சத்தை சற்று நோக்குதல் பொருந்தும் எனக்கருதுகின்றேன்.
இதன் இதழ்கள் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங்கண்ணிச்செழுங்குடிச்செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.   “மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.
“காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழைநீரால் அடித்து வரப்பட்ட காந்தட்கிழங்கை நட்டு வளர்த்துத்தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது.
“சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்”  என தெய்வங்களுக்கு காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. “வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து போராடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக்கூறுகின்றது.
இப்படிக்கார்த்திகைப்பூவினை பாடாத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப்பூ நிறைந்து கிடக்கின்றது.  தமிழர் பண்பாட்டுக்கு நெருக்கமான பூவாக இருப்பதும் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கின் இயற்கைச்சூழலுக்குரிய ஓர் உள்நாட்டு இனமாக இருப்பதும் தேசிய பூவினதும், நினைவுப் பூவினதும் தேர்வில் கார்த்திகைப்பூ தேசியப்பூவின் தேர்வின் அடிப்படையம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
"அந்த வகையில் அவர்களிற்கு பொப்பி மலர், எங்களிற்கு காந்தள் (கார்த்திகை) மலர்..."
(தகவல்கள் இணையத்திலிருந்து)
(இதிலுள்ள பொப்பி மலரின் படம் facebookஇல் CoverPhotoஆக பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.)
பொப்பி மலர் தொடர்பான  மேலதிக தகவல்களிற்கு இச்சுட்டியினை பாருங்கள்:-
http://www.vfw.org/Community/Buddy-Poppy/

அன்பான உள்ளங்களிற்கு,  

வலைச்சரத்தின் ஒரு பூவாய், நானும் இந்நன்னாளில் இணைந்துகொள்கிறேன்…

"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை"
-லியோ டால்ஸ்டாய் அவர்களது சிந்தனையில் இருந்து - 
எமது மண்ணிற்காக பூவாய் பிஞ்சாய் உதிர்ந்தவர்கள் நினைவுடன்  என் பணி தொடரும்...
என்றும் அன்புடன்,
அமர்நாத்(நரேன்) 








This free script provided by
JavaScript Kit