"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, November 27, 2010

யமுனா ஏரியும் மந்திரிமனையும்

யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணிஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது யாழ்ப்பாண அரசின் முதல் அரசனாகக் கருதப்படும் கூழங்கை சக்கரவர்த்தியின் காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண வைபவமாலை, நல்லூர் நகரம் உருவாக்கப்பட்டது பற்றிக் கூறும்போது,
....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........
என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த பொழிந்த முருகை கற்களையும்,வெள்ளைக்கற்களையும் கொண்டு கட்டப்பட்ட கேணியையே ஆகும். யமுனாநதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது.
 கோட்டைக்குரிய சுவர் அமைப்பு முறையிலே இவ்வேரியின் இறுதிவடிவம் ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இவ்வேரியிலுள்ள சேறுவாரி வெளியே எடுக்கப்பட்டபோது இலுப்பை மரத்தினால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய அம்மன் சிலை வெளிவந்தது. இவ் அம்மன் சிலையானது தற்போது யாழ் அரும்பொருளகத்தில் (அரும்பொருளகம் தற்போது உள்ள நிலை தொடர்பாக பின்னர் தனியே நோக்குவோம் ) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சங்கிலியன் தோப்பு மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகமொன்றினால் மந்திரிமனைக்கும் அந்த யமுனா ஏரிக்குமிடையே தரைக்குக் கீழாக அமைந்த சுரங்கப் பாதையொன்று புராதன காலத்தில் அமைந்திருந்தது என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. மந்திரிமனையின் பிற்சுவர் ஒன்றுடன் அவ்வாறமைந்த சுரங்கப்பாதையொன்றின் வாயில் மிக அண்மைக்காலம் வரைக்கும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.இவ்வேரியைச் சுற்றி சில கட்டடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டி வேலைப்பாடுடைய சுண்ணாம்புச் சாந்தினால் ஆன தூண்கள் பழைய ஓடுகள்,பட்பாண்டங்கள் என்பன உறுதிப்படுத்துனின்றன.சிலர் இவ்விடத்தில் அரச மகளீர் குளிப்பதற்கான மண்டபங்கள் இருந்ததாகக் கருதுகின்றனர்.
"கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த குடிகள் நாம்” என்னும் உரைகளில் நாம் காட்டும் ஆர்வத்தில் ஒர் சிறு பங்கையேனும் எமது வரலாற்று  ஆதாரங்களை  பேணுவதில் நாம் காட்டுவதில்லை. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை.
யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக அனுமதித்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லூர் இராசதானியின் இறுதி எச்சங்களாக இன்று எஞ்சியுள்ளவற்றுள் பிரதானமானது இந்த ”யமுனா ஏரி” தடாகம். புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு அது இன்றுமிருக்கிறது.
யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட அவ்விடத்தில் இருக்கும் இளையோர்கள் கூட சரியாக அடையாளங்காட்ட மாட்டார்கள். அந்த அளவில் யமுனாஏரி பற்றிய விழிப்புணர்வு எங்கள் யாழ் மக்களிடம் இருக்கின்றது.

அடுத்தது யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை அண்மித்து அமைந்துள்ள "மந்திரிமனை".  இது ஓர் புராதன மாடி வீடு. பிரதான வாசலிலே அவ்வீடு பற்றி சாசனம் ஒன்று பழந்தமிழில் எழுதப்பட்டிருக்கும். உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம். அதுவும் சிதைவடைந்தவாறேயுள்ளது.
முன்பு ஒரு முறை அங்கு ஒர் ஏழைக் குடும்பமொன்று அதன் ஒரு பகுதியைத் தமது வசிப்பிடமாக்கி இருந்ததையும்  எஞ்சிய பகுதிகளை அவ்விடத்தில் வசிக்கும் மூதாட்டியொருத்தி தனது ஆடு மாடுகளைக் கட்டுமிடமாக உபயோகித்துக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது . இவ்வாறாக எங்கள் வளங்களின் உச்சப்பயன்பாடு சென்றுகொண்டிருந்தது.
அதேபோல் யாழ் பருத்தித்துறை வீதியில் நல்லூரில் அமைந்துள்ள நுளைவாயில். சங்கிலியனின் தோப்பிற்கான வாயில்  இது என்கிறார்கள். இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று (வரலாற்று ஆதாரக் காப்பிற்காக ஒரு சில நடவடிக்கைகளை நம்மவர்களும் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்று ஆதாரம் இக் கொட்டகை) அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாத்திருந்தார்கள்.
இப்படியாக எங்கள் மரபுவழி முதுசங்கள் பேணப்படும் ஆர்வம் சென்று கொண்டிருக்கிறது. எப்போது தான் நாமெல்லாம் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடப் போகின்றோமோ? ஆனால் தாமதமாகும் ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பது மட்டும் வருத்தத்திற்குரிய உண்மை. அத்துடன் இவை இன்று  திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகின்றன.
இவற்றை பேணி பாதுகாக்க இன்றைய சூழலில், சமூக ஆர்வலர்கள், தொல்பொருள்துறை, மாநகரசபை என பலர் இருந்தும்  யார் முன்வருகிறார்கள்? 

No comments:

Post a Comment