"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Friday, December 10, 2010

2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை - மீளும் நினைவுகள்

2004 வருடம் தேதி டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி அமைதியான அதிகாலை நேரம் உலகையே மாபெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்தக் கறுப்பு ஞாயிறு....
பூமி பரப்பெங்கும் அதிர்ச்சியையும் மாறாத சோகத்தையும் அழிவையும் பரவவிட்டுச்சென்ற அந்த பேரலை இலங்கையையும் தாக்கியது. தேசமெங்கும் மரண ஓலம், பிணங்கள், இடிபாடுகள்.... 
கடல்நீர் கழுத்தளவு உயரம், பனையளவு உயரம் என கரையோரமேங்கும் நிறைந்து நின்றது. 
இலங்கையின் வடக்கு – கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. வடபகுதியில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களும் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களும் தெற்கில் அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களும் பெருமளவு அழிவினை எதிர்நோக்கின. இப்பகுதிகளில் பெருமளவிலான உயிர் உடைமை இழப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றது. 
                                       தெற்கு ஆசிய கடலோர நாடுகளில் பகுதிகளை சில மணிநேரங்களுக்குள் உலுக்கி சுமார் மூன்று இலட்சம் மனித உயிர்களை காவுகொண்டு பல்லாயிரம் பேரை குற்றுயிராக்கியதுடன் பல இலட்சம் மக்களை நொடிப் பொழுதில் இடம்பெயரவும் வைத்துவிட்டது. பல கிராமங்கள் உலக வரைபடத்தில் இருந்தே துடைத்தெறியப்பட்டன. நினைத்திராத பொழுதில் கண்முன்பே நடந்து முடிந்துவிட்ட அந்த கோர அனர்த்தத்தின் விளைவுகளை ஜீரணிக்க முடியாமலும் இழப்பின் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமலும் பல லட்சம் மக்களை அந்த அவல ஞாயிறு விரக்தியின் விளிம்பில் விட்டுச் சென்றது. 

இப்பேரிடர் இலங்கையை மட்டுமல்லாது இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் கரையோர மக்களையும் கடுமையாக தாக்கிவிட்டது. 

ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து 2010/12/26உடன் 6ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனாலும் அந்த கோரமான நாட்கள் நம்மில் இருந்து விரைவில் மறைந்து போகாது. சுனாமி (Tsunami) என்பது யப்பானிய மொழியில் "harbor wave" (துறைமுக அலை) எனும் அர்த்தமுள்ள சொல்லின் அடிப்படையில் , ஆழமான நீர்ப்பரப்பின் அடிப்பகுதியில் உண்டாகும் பூகம்பம் அல்லது பூமியதிர்வு காரணமாக உண்டாகும் இராட்சத அலைகளை குறிப்பிடுகின்றது. அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் 2004 டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி  சுமார் 250,000இற்கும் மேலான மனித உயிர்களை பலிகொண்டும் , பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினை ஏற்படுத்தியுமிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்லாமல் பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்டது.
 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் நிகழ்ந்த இவ் அனர்த்தத்தின் பின்னரே "சுனாமி" என்ற பெயர் இலங்கையில் பலருக்குத் தெரியவந்தது.ஆனால் இவ் அனர்த்தங்கள் முன்பும் உலகின் பல பகுதிகளில் இடம்பெற்று அழிவுகளை ஏற்படுத்தியுள்ளமை தெரிந்ததே.ஹவாய் தீவில் 1819இலிருந்து 46 சுனாமிகள் தாக்கியிருக்கின்றன. 1960இல் சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகப் புற ப்பட்ட அலை 16000 கி. மீ. தாண்டி ஜப்பானை வந்து தாக்கியது. 22 மணி நேரம் பயணம் செய்தது.  1971 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள "ரியுகியூ" தீவுகளை 85 மீற்றர் உயரமான சுனாமி அலைகள் முதல் முதலில் தாக்கியுள்ளது.
 யாழ்ப்பாண மொழியில் சொல்வதாயின் 5 பனை (ஐந்து பனை) மரம் உயரத்தில் ஆழிப்பேரலை தாக்கியழித்தது.
26.12.2004 இல் அதிகாலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவில் உள்ள சுமாத்திரா தீவின் வடமேல் கரையை அடுத்த கடலில் ஒன்பதாயிரம் (9000) மீற்றர் தொடக்கம் பத்தாயிரம் (10000) மீற்றருக்கு இடைப்பட்ட புவியாழத்தில் பூமியை மூடி இருந்த தகட்டோடு விலகியதால்தான் அது புவிநடுக்கமாக மாறி சுனாமி உருவாகியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
புவி நடுக்கம் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் பூமியில் எங்கேயாவது ஒரு இடத்தில் இடம்பெறுகின்றது. புவியோட்டின் ஒரு பகுதி இயற்கையாகவே சடுதியாக அதிர்ந்தால் அதனை புவி நடுக்கம் என அழைப்பார்கள். இதனையே எமது முன்னோர்கள் பூகம்பம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு இரணடரை மணி நேரத்திலும் இடம்பெறுகின்ற புவி நடுக்கங்கள் எல்லாம் அழிவுகளை ஏற்படுத்தமாட்டாது. சில வேளைகளில் வேகமாக இடம்பெறும் புவிநடுக்கங்களே அழிவுகளை ஏற்படுத்துகின்றன.
சுனாமியும் கடலடி பூகம்பத்தின் விளைவினால் உருவாகுவதாகும். கடல் நீரின் மட்டத்தைச் சற்றேதான் சுனாமி உயர்த்துகிறது. புறப்படும் போது அந்த அலை மூன்று நான்கு அடிதான் உயரம் இருக்கும். நீரில் கல் எறிந்தால் வட்ட வட்டமாக அலைகள் பரவுவதுபோல் ஒரு இராட்சத வட்டம் ஆரம்பபுள்ளியிலிருந்து பரவி தன் பயணத்தைத் தொடங்குகிறது. ஆழ் கடலில் சுனாமி அவ்வளவு ஆபத்தானதல்ல. உயரம் குறைவாக, வேகமாக பரவுவதால் நடுக்கடலிலுள்ள கப்பல்களை ஒரு தூக்கு தூக்கிவிட்டு பயணத்தைத்தொடரும். குறுகிய காலத்தில் அது 1000 கி.மீ. வரையான வேகத்தில் கரையைத் தாக்கும் போது அதன் சீற்றம் அதிகமாக இருக்கும். கடலோர கட்டடங்களை அழிக்கும். திரும்பும்போது அனைத்தையும் இழுத்துச் செல்லும். 2004 காலப்பகுதியில் பேராபத்துக்கான எச்சரிக்கை தரும் கருவிகள் எதுவும் இங்கு இருக்கவில்லை. அதற்கான செய்தித் தொடர்புகள் எதுவுமில்லை. இருந்திருந்தால் சுனாமி சுமாத்திராவிலிருந்து புறப்பட்டு வந்து சேரும் சில மணி நேரத்துக்குள் நம் கடலோர மக்கள் அனைவரையும் காப்பாற்றியிருக்கலாம். 

ஒவ்வொரு வருடமும் உலகத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் தொடக்கம் ஐம்பதாயிரம் (40,000-50,000) வரையிலான சிறிய புவிநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கூடுதலான மக்கள் இறக்கின்றனர். வீடுகள், கட்டடங்கள், சில கிராமங்கள் அழிந்து போகின்றன. சில நதிகளும் திசைமாறி ஓடுகின்றன. புவிநடுக்கம் நேரடியாக மக்களை கொல்லாவிட்டாலும் அதனால் ஏற்படும் தாக்கங்களினால் மக்கள் கூடுதலாக காவு கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக சமுத்திரத்தின் அடித்தளத்தில் ஏற்படும் புவிநடுக்கம் பெரிய பேரலைகளை உருவாக்கி கரை யோரங்களில் உள்ள வலுவுள்ள உயிரினங்கள் உட்பட மாடமாளிகைகள், இராஜ கோபுரங்களைக் கூட நொடிப்பொழுதில் தகர்த்து எறிகின்றன. புவியின் உள்ளமைப்பு மூன்று பெரும் படைகளைக் கொண்டதாக இருக்கின்றது. 


1. புவியோடு (Earth Crust)
2.இடையோடு (Mesosphere / Mantle)
3.கோவளம் (Bery Sphere / Centro sphere)
இவற்றின் இடையேயான அசைவுகளே நடுக்கங்கள் ஏற்பட பிரதானமான காரணமாகும். அகழிகள் காணப்படும் இடங்களினை அண்டியே கூடுதலாக புவிநடுக்கம் ஏற்படுகின்றது. 1906 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.15 மணிக்கு கலிபோர்னியாவில் பாரிய ஒரு புவிநடுக்கம் தாக்கியது.  கலிபோர்னியாவின் வடகரையோர நிலம் (450) நானூற்று ஐம்பது கிலோமீற்றர் தூரத்திற்கு பிளந்தது. உலகிலே மிக நீளமான அகழியின் பெயர் சில்லியன் அகழியாகும். இதன் நீளம் 5900 (ஐந்து ஆயிரத்து தொள்ளாயிரம்) கிலோமீற்றர். இதன் அகலமே 100  (நூறு) மீற்றர்தான்.
ஆறாம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட புவி நடுக்கத்தினால் இறந்த (பலியான) மக்கள் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமென புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 1908 ஆம் ஆண்டு இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கம் சுமார் அரை மணி நேரம் நிலைத்தது. இதில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பலியானார்கள். 1920 ஆம் ஆண்டில் சீனாவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். 1917 ஆம் ஆண்டில் நிகழ்ந்த புவி நடுக்கத்தில் ஒரு இலட்சம் மக்கள் மீண்டும் சீனாவில் கொல்லப்பட்டனர். டோக்கியோவில் 1923 ஆம் ஆண்டு நடந்த புவி நடுக்கத்தில் இரண்டரை (2 1/2) இலட்சம் மக்கள் அழிந்தனர். 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட புவி நடுக்கத்தில் (35000) முப்பத்தைந்தாயிரம் மக்கள் இறந்தனர்.
இதைவிட பல இடங்களில் புவி நடுக்கம் ஏற்பட்டு தாக்கங்களை ஏற்படுத்தினாலும் கூட இவைகளை விட மிகக் குறைவான தாக்கங்களையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கூட 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறிதளவான புவிநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள், பாலங்கள் சரிந்தன. பெரிதளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்திகதி ஏற்பட்ட சுனாமியின் போது இந்து சமுத்திரத்தின் கரையோரப் பகுதி முழுமையாக பாதிப்பிற்கு உள்ளானது. இதில் இலங்கையிலேயே ( 38,195) முப்பத்தி எட்டாயிரத்து நூற்றுத் தொண்ணூற்று ஐந்து பேர் உயிரிழந்துள்தாகவும்  இதில் தமிழர்கள் வாழ்விடங்களிலே கூடுதலான உயிரிழப்பும் சொத்திழப்பும் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிவாரண அமைச்சின் அதிகாரிகள் 2005 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை (இயற்கை தாண்டவம்) 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாளில் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் (கடலில் ) பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா, தமிழர் தாயகப்பகுதிகள் , சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழிவுசெய்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. 
தமிழர் தாயகப்பகுதிகளில் காலை 8.35 தொடக்கம் 10 மணிக்குட்பட்ட சில மணி நேரத்தில் இந்த அழிவு நடந்தது. ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் இலங்கையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, கம்பகா ஆகிய பன்னிரண்டு மாவட்டங்கள் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர். இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளே மோசமாக அனர்த்தத்தினால் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்களும் ஆய்வுகளும் விளக்குகின்றன. இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு கள்ளப்பாடு என்ற கிராமம் முற்றாகவே அழிந்தது.


















அதற்கடுத்தபடியாக அம்பாறையிலும் அதற்கு அடுத்தபடியாக மட்டக்களப்பிலும் அதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை தொடக்கம் வடமராட்சி வடக்கு, கிழக்கு பகுதிகள் அழிவுகொண்டன. 

இந்த அழிவு தமிழர் தாயகப்பகுதிகளில் 64 வீதமாக பதிவாகியது, சுனாமியால்  இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக அதிகளவிலான உயிர்கள் தமிழர் தாயகப்பகுதிகளிலேயே காவு கொள்ளப்பட்டிருந்தன. தமிழர் தாயகப்பகுதிகளில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை சுமார் இருபதாயிரம் ஆகும். இதில் அதிகமாக தமிழ்மக்களே பலிகொள்ளப்பட்டனர். அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லீம் மக்கள் பலரும் பலி கொள்ளப்பட்டனர். இதில் பெரும் தொகையான வீடுகள் கோயில்கள், பாடசாலைகள், அரச வைத்திய சாலைகள் உட்பட பல கட்டடங்கள் தரை மட்டமாகின. தங்கநகைகள் உட்பட பல சொத்துக்கள் அழிந்தன.
சுமாத்திராத்தீவின் சுனாமி மிகவும் கொடிய வேகத்துடன் பொங்கி எழுந்து உருவாகிய இடத்தில் சுனாமிப்பேரலையின் நீளம்(160) நூற்று அறுபது கிலோமீற்றர் கொண்டிருந்தது. நடுக்கடலில் வரும் பொழுது மணிக்கு(450) நானூற்று ஐம்பது தொடக்கம் (800)எண்ணூறு கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் இரண்டு பனை வரையிலான உயரத்தில் உயர்ந்து வந்தது. அதேநேரம் ஆழங்குறைந்த கரையில் வரும் போது மேலும் அரைப்பனை உயர்ந்து இரண்டரைப் பனை உயரத்தில் சராசரி உயரம் முப்பது மீற்றராக உயர்ந்து அதன் வேகம் மணிக்கு (100) நூறு கிலோமீற்றர் வரையாக குறைந்து கரையை உட்புகுந்துடைத்து, எடுத்துவந்த வேகத்தை விட சற்றுக்குறைவான வேகத்தில் வெளியேறியது. இந்து சமுத்திரத்தின் பிராந்திய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளும், பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியக் கடற்பரப்பில் உள்ள கடற்கரைப்பகுதிகளும் சுனாமியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னம் ஆகியன. இதில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு, சோமாலியா, மியான்மார், வங்களாதேசம் ஆகிய நாடுகள் கூடுதலான பாதிப்புக்களை சந்தித்தன. 
இந்தோனேசியாவில் சுமாத்திரா, யாவா, கனிமான்ரன் ஆகிய இடங்களில் கூடுதலாக பேரழிவுகளை சந்தித்தது. இதேபோல் இந்தியாவில் நாகபட்டினம், கன்னியாகுமாரி, கடலூர், பாண்டி, சென்னை, அந்தமான், நிக்கோபர், கேரளா, ஆந்திரா ஆகிய இடங்கள் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அவலமாக சோகம் நிறைந்த நிலையில் வாழ்கின்றனர். குடும்பத் தலைவர் களை இழந்த பெண்கள் இன்றும் தமது வரலாறு, தமது வாழ்வு முடிந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். 
அநேகமான குடும்பங்கள் உளவளத் துணையின் ஆலோசனையுடன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றன. சுனாமி கணப்பொழுதில் வந்து கரையோரப் பிரதேசத்தினையும் அதனை அண்டிய பகுதியினையும் அழித்துவிட்டு சென்றுவிட்டது. இவ்வழிவிலிருந்து மக்களை மீட்பதற்காகவும் வளமுள்ள வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காகவும் இலங்கையரசு, அமைச்சு, பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஒரு பிரிவும், இதனை விட சர்வதேச தனியார் நிறுவனங்களும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும், மக்களின் வாழ்க்கையையும் வளத்தையும் கட்டி எழுப்ப முயற்சிகள் மேற்கொண்டபோதும் அவை நிறைவடைய முன்னரே போர்ச்சுனாமி மீளவும் தாயகப்பகுதிகளை சிதைத்துவிட்டது.    
சுனாமி அழிவுகளுக்குப்பின்னனர் பாதிப்புக்கள் ஏற்படும் என எதிர்பார்க்கின்ற நாடுகள் தமது நாட்டு மக்களை இயற்கை அனர்த்தங்களின் பொது எவ்வாறு பாதுகாப்பது? அவர்களுக்கு எப்படி அறிவூட்டுவது? போன்ற வேலைகளை 2004ஆம் ஆண்டுக்குப்பிறகு ஆரம்பித்தன. அதன்படி சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைத்து அவற்றினை ஒத்திகைக்கு உட்படுத்துதல், மக்களுக்கு சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் நடைபெறும் போது எவ்வாறு நடந்து கொள்வது என்பதுபற்றி அறி வூட்டும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தோனேஷியாவைப் பொறுத்தவரை நில நடுக்கம் சாதாரணமாகவே அடிக்கடி ஏற்படுகிறது. இந்தோனேஷியாவும், தாய்லாந்தும் அமெரிக்காவின் ஹவாய் தீவில் செயல்பட்டு வரும் பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளன. எனினும், இந்த நாடுகளை டிச. 26 அன்று சுனாமி தாக்கிய சமயத்தில், அத்தாக்குதல் பற்றி அமெரிக்காவோ, சுனாமி எச்சரிக்கை மையமோ முன்கூட்டியே தகவல் கொடுத்து எச்சரிக்கத் தவறியிருந்ததாக குற்றச்சாட்டும் இருக்கிறது. பல நூறாயிரம் யிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுற்றுலாத் துறைக்கு கடும் சேதத்தை விளைவித்தது. இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுனாமியால், கடும் சோதனைகளை எதிர் கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் இருக்கையில் ஒருவாறாக பாதிக்கப்பட்ட நாடுகள் பல வெளிநாடுகளின் உதவிகளுடன் தமது நாடுகளைக் கட்டியெழுப்பின. சில நாடுகளில் இன்னமும் முழுமை பெற்றதாக இல்லை எனத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இந்தோனெசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் மீண்டும் மீண்டும் அழிவுகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் பாதிப்புக்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. 
உலகளவில் சுனாமி ஏற்படுத்திவிட்ட வடு காய்வதற்கே  நீண்ட காலமாகும். அதற்குள் இன்னும் எத்தனையோ கோர அழிவுகளையும் எமது கரையோர மக்கள் கண்டுவிட்டார்கள். பல அழிவுகளை ஏற்படுத்திய "சுனாமி"யின் கோரப்பிடிக்குள் சிக்கி உயிர் இழந்த அனைத்து மக்களின் ஆன்மாக்களும் அமைதிபெற நாமும் பிரார்த்திப்போம்.


( படங்கள் இணையங்களிலிருந்து) 

No comments:

Post a Comment