"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Tuesday, December 28, 2010

சாவினை வென்று வாழ்வேன்



'மரணம்(சாவு)'
அது என்றோ என் வாழ்க்கையில் குறுக்கிடப்போகுமொன்று.
எவருக்கும் அது புரியும்போது சாவின்பயம் விலகிவிடும்.
சில சந்தர்ப்பங்களில் அது என்னை உரசிச்சென்றதுண்டு,
ஆனாலும் ஏனோ ஆரத்தழுவவில்லை.
உரசியபோதெல்லாம் உணர்வுகள் மரத்துத்தான் போயின.
மாண்டு மீண்டவர்கள் கூறுவதுபோல் ஒளிவெள்ளம் தோன்றவில்லையெனக்கு.
வானதூதர்கள் வந்து வரவேற்கவில்லை,
ஏன் எமன்கூட வரவேயில்லை.
(ஓ, அவலமாய் சாவுகள் வரும்போது அவர்கள் வருவதில்லையோ?)


விதவிதமாய் சாவுகளை கண்முன்னே கண்டதனால்,
இதுதான் வாழ்க்கையென பதிந்துபோனது.
இப்படி ஏதோ ஒருவழிதான் என் முடிவுமென மனம் உணர்ந்துகொண்டது.
பலரும் நினைக்கவே தயங்குவதை எழுதவும் முடிகிறது.
இப்போ என் விருப்பெல்லாம்...
உயிரோடுள்ளபோது மற்றவர்க்கு என்னால் என்ன பயன்?
அதைவிட அதிகம் பயன் சாவின்பின் கிடைக்கவேண்டும்.
இறந்தபின்னும் என் கண்கள் என்னன்னை பூமியை பார்க்கவேண்டும்.
பார்வையற்ற எவரோவொருவர் அதனால் பார்வை பெறவேண்டும்.
அவ்வாறே பயனுள்ள உடற்பாகங்கள் மீண்டும் பயன்படவேண்டும்.
தீயிலெரிவதால் எவருக்கென்ன பயன்?
குழிக்குள் விதைப்பதனாலும் பூமித்தாய்க்கு அது வேதனை.
வேண்டாம், மீதி மருத்துவத்துறைக்கு பயன்படட்டும்.
சாவின் பின் நிகழ்வுகளும் வேண்டாம்- வீண் பெருமையது.
உணவுகளை கொடுங்கள், ஊருக்கல்ல,
சிறுவர் இல்லங்களிற்கு.
ஆடைகளை கொடுங்கள், அர்ச்சகருக்கல்ல,
பெற்றோர்களற்ற மழலைகளிற்கு.
விரும்பினால் ஒரு சுடரை ஏற்றுங்கள்,
சுடரில் என் உணர்வுகள் பேசும்.
என்னால் பயன்பெற்றோரை உற்றுப்பாருங்கள்,
அவர்களில் நான் சாவினை (மரணத்தை) வென்று வாழ்ந்துகொண்டிருப்பேன்.





This free script provided by
JavaScript Kit

No comments:

Post a Comment