"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Tuesday, November 30, 2010

கீரிமலை நகுலேச்சரம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் முழு முதற் கடவுகளாகப் போற்றப்படும் சிவனுக்கு ஈழமெங்கும் பல ஆலயங்கள் இருந்ததை நாம் அறிகிறோம். ஈழத்திலுள்ள ஈச்சரங்க்களுள் ஒன்றாகவே கீரிமலை நகுலேச்சரமும் விளங்குகிறது. அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவன் கோவில்களில் கீரிமலை சிவன் கோவிலே மிகவும் பழைமையானதாகும். இவ்வரலாற்று சிறப்புப் பெற்ற கோவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ளது. கீரிமலை, மாவிட்டபுரம், காங்கேசன்துறை ஆகிய மூன்று கிராமங்களும் உள்ளடங்கிய பிரதேசம் 'கோயிற் கடவை' என்ற பெயரால் சிறப்பாக அழைக்கப்பட்டு வந்தது.


இக்கோவில் ஆதி காலத்தில் நகுலேஸ்வரம், திருத் தம்பலேஸ்வரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. 'விஜயன் தனது அரசாட்சியை ஆரம்பிக்கும் முன்னர், தன் அரசுக்குப் பாதுகாப்பாக நான்கு திக்கிலும் நான்கு சிவாலயங்களை எழுப்பினார்' என யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது.


வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதியில் நாக இனத்தவர்களில் இராசதானியாக விளங்கிய கதிரமலை என்ற இடமே தற்போது கந்தரோடை என அழைக்கப்படுகிறது. நாக அரசர்களுடன் நட்புக் கொண்ட விஜயன், வட பகுதிக்குப் பாதுகாப்பாக கீரிமலைச் சாரலில் திருத்தம்பலை எனும் பகுதியில் திருத்தம்பலேசுவரன், திருத்தம்பலேசுவரி கோவிலைக் கட்டினான். மேலும் காசியிலிருந்து வாமதேசாசாரியன் என்னும் பிராமணரையும் இங்கு வரவழைத்து கோவில் பூசை கடமைகளையும் செய்வித்தான் எனவும் இக்கோவில் காணப்பட்ட கிராமத்திற்கு கோவிற் கடவை என்ற சிறப்புப் பெயர் உண்டானது எனவும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால் விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இச்சிவாலயம் சிறப்புப் பெற்று விளங்கியுள்ளதை புராண வரலாறுகளும் ஐதீகங்களும் எமக்கு விளக்கியுள்ளன. பல்வேறு காரணங்களால் காலத்துக்குக் காலம் ஆலயங்கள் அழிக்கப்பட்டதை நாம் அறிகிறோம். எனவே அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயத்தை விஜயன் மீளக் கட்டியிருக்கலாமேயன்றி புதிதாக ஆலயத்தைக் கட்டினான் என்பதை ஏற்க முடியாது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.


திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகிய ஆலயங்கள் எவ்வளவு பழைமையானதோ, அத்தகைய பழைமை கொண்ட ஆலயம்தான் நகுலேஸ்வரம் என்பது பொதுவான கருத்தாகும். கி. மு. 1500 வருடங்களுக்கு முன்பு வட இந்தியாவில் அரசாண்ட பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுணன் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு புண்ணிய தீர்த்த தலமான நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் என்ற மகாபாரதக் குறிப்பில் இருந்து நகுலேஸ்வரம் என்ற தலத்தின் தொன்மையை நாம் அறியலாம்.


நகுல முனி என்பவர் சாபம் காரணமாக தான் பெற்ற கீரிமுகத்தை நீக்குவதற்காக கோவிற் கடவை மலைச்சாரலில் தங்கியிருந்து அங்கிருந்த புனித தீர்த்தத்தில் நீராடி தன் முகத்தில் இருந்த குறை நீங்கப் பெற்றார் என்பது வரலாறு ஆகும். இக்காரணத்தாலே அவர் தங்கியிருந்த இடத்திற்கு கீரிமலை என்ற பெயர் வழங்கப்பட்டது. இச் சம்பவத்தின் பின்னர் திருத்தம்பலேசுவரர் கோவில் 'நகுலேசர் கோவில்' என்றும் திருத் தம்பலேசுவரி கோவில் 'நகுலாம்பிகை' கோவில் எனவும் வழங்கப்பட்டது என யாழ்ப்பாண வைபவ மாலையில் கூறப்பட்டுள்ளது.


கீரிமலைத் தலத்தின் சிறப்பை மாருதப் புரவீகவல்லியின் வரலாற்றிலும் நாம் காணக் கூடியதாக உள்ளது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான மாருதப் புரவீக வல்லிக்கு குன்ம நோய் காரணமாக குதிரை முகம் பெற்று காணப்பட்டாள். இதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மாருதப்புரவீக வல்லிக்கு 'மருந்துகள் எதுவும் பயன்தராது. தீர்த்த யாத்திரையின் மூலமே சுகமடைவாய்' என சந்நியாசி ஒருவர் கூறினார்.


மேலும் 'இலங்கையின் வடமுனையில் கீரிமலை என்றொரு மலையுண்டு. அங்கே உவர்ச்சல் மத்தியில் சுத்த தீர்த்தமும், மலையருவித் தீர்த்தமும் கலந்த உத்தம தீர்த்தம் ஒன்று உண்டு. அப்புனித தீர்த்தத்திலே நீராடினால் சுகம் பெறுவாய்' எனக் கூறினார். அவர் வாக்கை அருள் வாக்காகக் கொண்டு புறப்பட்டு வந்த மாருதப் புரவீக வல்லி, கீரிமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த நகுல முனிவரைக் கண்டு வணங்கி, தன் சாபம் பற்றிக் கூறினாள். நகுல முனிவரும் தல மகிமை, தீர்த்த விசேடம் ஆகியவற்றை அவளுக்கு எடுத்துக் கூறி, தன் கீரி முகம் மாறிய அற்புதத்தையும் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மாருதப் புரவீக வல்லி அங்கு தங்கியிருந்து தீர்த்தமாடி, சிவாலய தரிசனம் செய்து குன்ம நோய் நீங்கி, குதிரை முகம் மாறி, அழகிய பெண்ணானாள். அவள் தான் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் கந்த வேளுக்கு ஒரு ஆலயம் அமைத்தாள் என்றும் அவ்வாலயமே 'மாவிட்டபுரம்' கந்தசாமி கோவில் என்றும் வரலாறு கூறுகின்றது.


ஆனாலும் நகுலேஸ்வரத்தின் மிகப் பழைமையான கோவில் கடலில் அமிழ்ந்து விட்டது. இரண்டாவது கோவில் போர்த்துக் கேயரால் தரை மட்டமாக்கப்பட்டது. மூன்றாவது கோவில் போரில் சிதைவடைந்து தற்போது புதுப்பிக்கப்படுகிறது என்றொரு கருத்தும் உண்டு. முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோவில் கடற்கரையில் உள்ள மலையில் இருந்ததாகவும் கடற்கோள் ஒன்று ஏற்பட்ட போது அக்கோவில் கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.


போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது கி. பி. 1621 ஆம் ஆண்டளவில் இரண்டாவது ஆலயம் முற்றாக தரை மட்டமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் வழிகாட்டலில் கி. பி. 1878 ஆம் ஆண்டு மூன்றாவது கோவில் கட்டப் பெற்றதாகவும் நாம் அறிகிறோம். கி. பி. 1878 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 24 ஆம் நாள் கீரிமலைக் கோவில் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரம் ஒன்றை நாவலர் வெளியிட்டார். அத்துண்டுப் பிரசுரத்தில் மேற்கூறப்பட்ட வரலாறு கூறப்பட்டுள்ளதுடன் கீரிமலையில் ஒரு சிவன் கோவிலை கட்டுவதற்கு பொது மக்களிடம் இருந்து பொருளுதவியும் கோரப்பட்டுள்ளது. கீரிமலை சிவாலயம் உருவாவதற்கு முன்னர் நாவலர் சிவபதம் அடைந்தாலும் அவருடைய வேண்டுகோளை ஏற்ற சைவ மக்கள் அப்பணியை நிறைவேற்றினர்.


நகுலேஸ்வரம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் மூன்று பிரகாரங்களும் ஐந்து கோபுரங்களும் கொண்ட மிகப் பெரிய ஆலயமாக விளங்கியுள்ளது. ஆனாலும் தற்போது உள்ள ஆலயம் சிவாகம விதிகளுக்கும் சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் அமையவே உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான நிலப்பரப்பு முருங்கை கற்பாறையின் மேலே காணப்படுகிறது. மேலும் வட கடற்கரையில் நிலத்தில் இருந்து கடலுக்குள் பாயும் பல அருவிகள் உண்டு. இக் கருவிகளுள் முக்கியமான அருவியாக கீரிமலை அருவி போற்றப்படுவதுடன் மிகப் பரிசுத்தமானதாகவும் கருதப்படுகிறது.


'Ancient Hindu Temples of Sri Lanka' என்ற நூலின் ஆசிரியரான திரு எஸ். ஆறுமுகம் அவர்கள் தனது நூலில் '....... The spring water how to Keerimalai is of great value and barhing in its waters imports therapeutic medicinal benefit to the human body. From its source in the rocks of Tellipallai - Maviddapuram (30 feet elevation) area, the spring waters flowing through the crecvices and fissures of the carbonated rocks, encountering tea water as it emerges at Keerimalai, acquire chemical values and minute electrolyt. ic charges, which tonic the functioning of the human syste' என்று குறிப்பிட்டுள்ளமை கீரிமலையிலுள்ள புனித தீர்த்தத்தின் பெருமையை எடுத்துரைப்பதாக உள்ளது.


பூஜை முறைகள் இவ்வாலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய வழிபாடுகள் சிவாகம முறைப்படி நடைபெறுவது வழக்கமாகும். இங்கு திருப்பள்ளி எழுச்சி தொடக்கம் அர்த்த சாமப் பூ
சை வரை நாள்தோறும் ஆறு கால பூசை நடைபெறுகின்றது. ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக சில காலம் பூசை வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் மூல மூர்த்திக்கு திருமணமான சிவாச்சாரியார்களே பூசை செய்யும் மரபு இன்றும் இக்கோவிலில் உண்டு.

திருவிழாக்கள் கீரிமலைச் சிவன் கோவிலின் வருடாந்த உற்சவம் மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி அமாவாசை தினத்தன்று தீர்த்த உற்சவம் நிகழும். அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் கொடியேற்றம் நடைபெறுவதுடன் சித்திரை வருடப்பிறப்பு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். மேலும் மாதந்தோறும் நடைபெறும் சோம வாரம், மாதப் பிறப்பு, வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், மானம் பூ, ஆவணி உத்தரம், கார்த்திகை விளக்கீடு, புரட்டாதிச் சனி, திருவெம்பாவை, திருவாதிரை, சொர்க்கவாசல், ஏகாதசி போன்ற பல்வேறு விரதங்களும் விழாக்களும் இங்கு சிறப்புற நடைபெறுவதுண்டு.


வழிபாட்டிலே சிவ வழிபாடு சிறப்புப் பெற்ற வழிபாடாகக் காணப்படுகிறது. சிவம் என்பதற்கு மங்கலம், சுபம், நன்மை, பேரானந்தம், உண்மை, மேன்மை என பல பொருள்கள் கொள்ள முடியும். ஆகவே உடற் பிணி, உளப் பிணி இரண்டையும் ஒருங்கே அழிக்கவல்ல கீரிமலைச் சிவன் கோவில் வரலாற்றில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இவ்வாறான சிறப்பு பெற்ற தலம் இன்று உள்ள நிலை கவலைக்கிடமானதாகும். பெரும் அழிவுக்கு உள்ளாகியிருக்கும்  இதனை புனரமைக்க ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.   
இவ்வளவு புனிதமான கேணியில் பாதணிகளுடன் இறங்குவதோ  சவர்காரம் பாவித்து குளிப்பதோ முற்றாக தடை செய்யப்பட்ட விடயமாகும். இதை அங்கு வரும்  சுற்றுலாப்பயணிகள் பின்பற்றுவதில்லை. அவர்கள் தாம் அணிந்து வந்த பாதணிகளைகூட புனித கீரிமலை கேணியில் கழுவுகின்றனர். இது அதன் புனித தன்மையை கெடுக்கும் செயலாகும். இதனை தடுக்க ஆலய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.ஆலய சூழலில் பெயரளவிற்கு அறிவுறுத்தல் பலகைகள் வைப்பது மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 

No comments:

Post a Comment