"இயற்கை எனது நண்பன்,வாழ்க்கை எனது தத்துவாசிரியன்,வரலாறு எனது வழிகாட்டி"

Saturday, October 22, 2011

லிபியாவின் உடைந்துபோன இரும்புக்கரம்

கேணல் கடாபியின் வரலாற்றுச்சுருக்கம்.
லிபியாவை கடந்த பல தசாப்தங்களாக ஆட்சி செய்த சர்வாதிகாரி கேணல் முகம்மர் கடாபி, தாங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக லிபியாவின் இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடாபியின் பிறந்த ஊரான சிர்த்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக இந்த படைகள் அறிவித்த சில மணிகளில் கடாபியை தாங்கள் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். முன்னதாக அங்கே பல வார காலம் நீடித்த கடும் மோதல்கள் இடம்பிடித்தன.

நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் லிபியாவை ஆண்ட அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை கைது செய்யக்கோரிவருகிறது.

கடாபியை தாம் கண்டுபிடித்ததாக தெரிவித்த ராணுவ வீரர் ஒருவர், அவர் பிடிபடுவதற்கு முன் “என்னை சுடாதே” என்று கூறியதாக பிபிசியிடம் தெரிவித்தார். ஆயினும் கடாபி முன்னர் ஊடகங்களுக்கு கூறியதைப்போலவே தனது மண்ணிலேயே உயிரை விட்டுள்ளார்.

முகம்மர் கடாபி, இளம் வயதிலேயே லிபிய இராணுவ வீரராக இருந்தவர். 1965இல்பெங்கசி இராணுவ பல்கலை கழகத்தில் கற்று பின்னர் 1966இல் பிரிட்டன் ரோயல் மிலிட்டரி பயிற்சியும் பெற்றிருந்தார். 1969 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ரத்தமில்லா ராணுவ கிளர்ச்சி மூலம் ஆட்சியைப்பிடித்து லிபிய அரபு குடியரசு என பிரகடனம் செய்தபோது அவர் லிபியாவின் மீட்பராக பார்க்கப்பட்டார். 27 வயதான இளம் ராணுவ தளபதியான கடாபி, சக ராணுவத்தினரால் சகோதரத் தலைவர் என்று செல்லமாக கூப்பிடப்பட்டார். அந்த அளவுக்கு அவருக்கு நல்லபெயர் இருந்தது. அவரும் ஆட்சிக்கு வந்த புதிதில் தன்னை மக்கள் தலைவனாகவே காட்டிக்கொண்டார்.

1942ஆம் ஆண்டு பிறந்த கடாபியின் சரியான பிறந்த நாள் எது என்பது முறையாக பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் ஜூன் ஏழாம் நாள் என கூறப்படுகிறது. ஆங்கர்ண்ய் பழங்குடி இன பெற்றோருக்கு பிறந்த கடாபி, தனது பழங்குடியின பின்னணியை விளம்பரப்படுத்துவதில் பெருமைப்பட்டார். உதாரணமாக தனது விருந்தாளிகளை நாடோடி கொட்டகையில் வரவேற்பது முதல், தனது வெளிநாட்டு பயணங்களில் இந்த கொட்டகையை கொண்டு சென்று அதை காட்சிப்பொருளாக வைப்பதுவரை தனது சாமானிய பின்புலத்தை அவர் மறக்காமல் காட்சிப்பொருளாக்குவார்.

ஆனால் அவரது ஆட்சியில் நாட்டில் அரசியல் கட்சிகள் எதையும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையற்ற அவரது தலைமையிலான ஆட்சியில் எதிர்ப்புக்கே இடமில்லை. எதிர்த்தவர்கள் ஒன்று சிறை சென்றார்கள். இல்லாவிட்டால் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்கள்.

ஆரம்பம் முதலே அவர் சர்ச்சைக்குரிய தலைவராக இருந்தார். மத்திய கிழக்கு பிரதேசத்திலும், உலக அரங்கிலும் அவருக்கு ஆதரவிருந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.

அவருக்கும் மேற்குலகுக்குமான மோதல் எண்பதுகளில் உச்சகட்டத்தை அடைந்தது. வெளிநாடுகளில் செயற்பட்டுவந்த ஆயுத குழுக்கள் பலவற்றை அவர் ஆதரித்தார். பாலத்தீன விடுதலை குழுக்களிலிருந்து, அயர்லாந்து ஆயுத குழுக்கள் வரை இவரது ஆதரவு பட்டியலில் இடம்பிடித்தன. இதனால் பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று மேற்குலக நாடுகள் அவரை பல தசாப்தங்களாக திட்டிவந்திருக்கின்றன.

லண்டனில் இருக்கும் லிபிய தூதரகத்திற்கு வெளியே பிரிட்டன் காவல்துறை அதிகாரி யுவன்னா பிளட்சர் சுடப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, லிபியாவுடனான தனது உறவை பிரிட்டன் முறித்துக்கொண்டது.

நான்காண்டுகள் கழித்து, ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ நகரத்தின் மேல் வான்பரப்பில் அமெரிக்க ஜம்போ விமானம் ஒன்று வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்டது. இதில் 270 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இரண்டு லிபியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சர்வதேச அரங்கில் கர்னல் கடாபி தீண்டத்தகாதவராக மாறினார்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லிபியா இழப்பீடு வழங்கியத்தைத் தொடர்ந்தும், பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களை கைவிடுவதாக அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தும் அவர் சர்வதேச நாடுகளால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக அங்கீகரிக்கப்பட்டார். மேற்குலக நாடுகளுடனான உறவிலும் மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் இத்தகைய சாதகமான மாற்றங்களை அவர் தனது உள்நாட்டு அரசியலில் முன்னெடுக்கவில்லை. விளைவு, வட ஆப்ரிக்க பிராந்தியத்திலும், அரபுலக நாடுகளிலும் வலுப்பெற்ற சீர்திருத்த கோரிக்கைகளின் தாக்கம் லிபியாவில் வலுவடைந்தபோது கடாபியால் அதை எதிர்கொள்ள இயலவில்லை. தனது ஆட்சிக்கு எதிரான ஆர்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்ற கடாபி, கடைசியில் ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த ஊரான சித்ரில் சென்று தஞ்சம் புகுந்தார். இறுதியில் அங்கேயே கொல்லப்பட்டுமுள்ளார்.

இவரது ஆட்சியில் லிபியாவில் காணப்பட்ட சிறப்புகள்
1)லிபிய குடிமக்கள் எவரும் மின்சாரகட்டணம் செலுத்தவேண்டியதில்லை.

2)லிபிய அரசின் வங்கிகளில் எந்த ஒரு லிபிய குடிமகனும் 0% வட்டிக்கு வங்கிகடன் பெற்றுகொள்ளலாம்.

3)லிபிய மனித உரிமைகளில் ஒன்று : லிபிய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனிதனி வீடுகள் பெற்றுகொள்ளலாம்,
கடாபி இறக்கும் நேரம் வரை கடாபியின் தாயும் தந்தையும் ஒரு தகர கூடாரத்தினுள்ளே வாழ்ந்துவருகின்றனர்.

4)லிபிய குடிமக்கள் எவரும் புதிதாக மணம் முடிக்கும் போது லிபிய அரசினால் $50000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.

5)லிபியாவை கடாபி தன் தலைமைபொறுப்பில் ஏற்கும் போது, லிபியாவின் கல்விகற்றோர் 25 விகிதம், தற்போது 83 விகிதம்.

6)எல்லா லிபியகுடிமகனும் விவசாயம் செய்யவேண்டும், அதற்கான நிலம், உபகரணங்கள், விதைகள், உரங்கள் , அனைத்தும் இலவசம்.

7)லிபிய குடிமகன் எவரும் தமது கல்வி அல்லது மருத்துவ தேவைக்காக வெளிநாட்டுக்கு செல்லவேண்டி இருப்பின், அவர்களின் இருப்பிட மற்றும் போக்குவரத்துக்காக மாதாந்தம் $2300 அமெரிக்க டொலர்கள் லிபிய அரசினால் வழங்கப்படும்.

8)ஒரு லிபிய குடிமகன் , மோட்டார்வாகனம் ஒன்று வாங்க முற்படும் வேளை லிபிய அரசினால் அதன் பெறுமதியின் 50% உதவிதொகை வழங்கப்படும்.

9)லிபியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை $0.14

10)கடாபியின் ஆட்சி இருந்தவேளை , லிபியாவின் வெளிநாட்டுகடன் $0 , லிபியாவின் தற்போதைய திறைசேரி இருப்பு $150 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

11)ஒரு லிபிய குடிமகன் பட்டதாரி ஆகி தன் தகுதிக்கான வேலையினை பெற்றுகொள்ளும்வரை அவர்களின் வாழ்க்கைசெலவுக்காக, அவர்களின் தகுதிக்கு அவர்களால் பெற்றுகொள்ளகூடிய சம்பளத்தின் 80% சம்பளம் வழங்கப்படும்.

12)லிபிய நாட்டின் என்ணைவளத்தினை வெளிநாடுகளுக்கு விற்று கிடைக்கும் இலாபத்தின் ஒரு பங்கு இலாபத்தை அனைத்து லிபிய குடிமக்களினதும் வங்கிக்கணக்குகளில் சமமாக பகிரப்படும்.

13)லிபியாவில் நாற்பது துண்டுகள் கொண்ட பாணின் விலை $0.15 அமெரிக்க டொலர்கள்.

14)லிபிய சனத்தொகையில் 25% ஆனோர் பல்கலைகழக பட்டதாரிகள்.

15)கடாபியினால் தொடங்கப்பட்டிருக்கும் (அனைத்து பாலைவனங்களினூடாகவும் பாயும்) உலகிலேயே மிக பெரிய செயற்கை ஆறு இன்னும் முற்றுபெறாது உள்ளது.

இவரது மரணம் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் சில... 
1)இவர் ஒரு வாகனத் தொடரணியில் தப்பிப் போகும்போது நேட்டோ படைகள் குண்டு வீசியதால் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், பின்னர் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் மரணமடைந்ததாகவும் கூறப்பட்டது.
2)ராய்டர் செய்தித்தாபனம் இவர் சிற்றா நகரில் கொல்லப்பட்டதாக அறிவித்தது.
3)நூற்றுக்கணக்கான வாகனத்தொடரணியுடன் இவர் தப்பியபோது குண்டு வீச்சில் காயமடைந்து மரணமடைந்தாகக் கூறப்படுகிறது.
4)சீமெந்து குழாய்க்குள் இருந்தே கடாபியின் சடலம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
                                இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இன்று ஒலி,ஒளி ஆதாரங்களுடன் நடந்தது என்ன என்பது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
கிளர்ச்சிப்படையினர் கடாபி தங்கியிருந்த அவரது சொந்த ஊரான சேர்ட்டேவை முற்றுகையிட்டனர். இதனிடையே நேட்டோப்படையினர் தமது வேவு பார்த்தலை அதிகரித்து கடாபி அந்நகரில் இருப்பதை உறுதிசெய்துகொண்டனர்.

கிளர்ச்சிப்படையினர் தாக்குதலை தொடுத்தவேளை அங்கிருந்து அவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அவரது வாகனத்தொடரணி மீது நேட்டோ படையின் ஆளில்லா விமானங்களும் ஜெட் விமானங்களும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக 5 வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றதாக நேட்டோப்படைப்பிரிவுக்கு செய்தி கிட்டியபோதிலும் அந்த வாகன தொடரணியில் எந்த வாகனத்தில் கடாபி இருக்கிறார் என்பதும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

பாதுகாப்புக்குச்சென்ற வாகனங்களை துல்லியமாகத்தாக்கியழித்துள்ளது நேட்டோப்படை. இதனால் அவர் வாகனம் மட்டும் பலத்த சேதமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பாளரும் சாரதியும் வாகனத்தை திருப்பி மறைவான ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். அதனையும் வேவுபார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் கடாபி வீதி ஓரமாக இருக்கும் ஒரு சுரங்கக்குழிக்குள் இருக்கிறார் என்ற தகவலை தலைமைக்கு பரிமாற அவ்விடம் நோக்கி கிளர்ச்சிப்படையினர் நகர்ந்துள்ளனர்.

காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பதுங்கியிருந்த அவரை வெளியே இழுத்து மேற்சட்டையை களற்றி அவரைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் அடித்து முதலில் கேவலப்படுத்தியுள்ளனர் கிளர்சியாளர்கள். பின்னர் அவர் தலையிலும் வயிற்றிலும் சுட்டுள்ளனர்.

 
ஆனால் கடாபி தன்னை சுடவேண்டாம் என கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மகன்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே அவர் உடலை ஒரு அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ஆனால் மேற்குலக தொலைக்காட்சிகள் கடாபி காயங்களுடன் பிடிபட்டதாகவும் அவருக்கு அவசர முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ரத்தப் பெருக்கு காரணமாக அவர் உயிரிழந்தார் எனவும் கதைகளைக்கட்டியது. நேட்டோ இராணுவம் மேற்கொண்ட செயல் போரியல் தர்மங்களுக்கு முரணானது என்பதை நன்கு உணர்ந்த மேற்குலகம், அதை மூடிமறைக்க முயன்று ஏதோ கண்ணியமான ஒரு நடவடிக்கையை நேட்டோப்படைப்பிரிவு செய்ததாக உலகுக்கு காட்ட நினைத்தது.

அமெரிக்காவின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி கடாபியை தனிமைப்படுத்தி அவருக்கு மரணபயத்தைக் காட்டி யாரும் இல்லாத நிலையில் வீதியில் ஓடவிட்டு பின்னர் ஒரு மறைவிடத்தை அவர் தேடிய போது கையில் ஆயுதங்களற்ற நிராயுத பாணியான அவரை கேவலமான முறையில் கொன்று அதை வெற்றி பெருமிதத்துடன் வெளியிடுவது உண்மையில் நீதிக்கு புறம்பான தர்மத்தை மீறிய செயல் என்பதில் மாற்று கருத்து இல்லை.

இதில் அடுத்த கேவலமான விடையம் என்னவென்றால் சரணடைந்த கடாபியின் வாகன ஓட்டுநரை முதலில் கைகளைக்கட்டி வாகனத்தில் ஏற்றிவிட்டு அதை மறைத்து பின்னர் அவர் இறந்துவிட்டார் எனவும் கிளர்ச்சிப்படையினரும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளன. இவரை பிடித்து உயிருடன் வாகனமொன்றில் ஏற்றியிருந்த படங்கள் வெளியாகி பொய் முகத்தை வெளிச்சமிட்டுள்ளன.

கடாபி சர்வாதிகாரியாக செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சி முறையில் மக்களை ஒடுக்கி குற்றங்களை புரிந்த ஒரு ஆட்சியாளர்தான் என்பதை மறுப்பதற்கில்லை. உலக நீதிப்படி குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டிய அவரை சுட்டுக்கொலைசெய்தமை நியாயப்படுத்த முடியாத செயலே. போரியல் தர்மத்தில் நிராயுதபாணியான எவர்மீதும் (அவர் போர் வீரனாகவே இருபினும்) தாக்குதல் நடத்துவதோ அல்லது கொலை seivatho அனுமதிக்கப்படவில்லை. அடுத்து போர் இடம்பெறும் பிரதேசத்திலும் கூட உயிர் காப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவதும் போரியல் விதிகளுக்கு முரணானதே. அனைத்திற்கும் மேலாக சரணடையும் ஒருவரை கொலை செய்வது எந்தவொரு விதியிலும் அங்கீகரிக்கப்படாத ஒன்றே. அவரை இலகுவாக சிறைப்பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்த சந்தர்ப்பங்கள் இருந்தும் அதை செய்யாமல் மிகவும் மோசமான முறையில் ஐ.நா வின் விதிகளை மீறி நடந்து கொண்ட கிளர்ச்சிக்காரர்களின் செயலுக்கு, இவ்வளவு காலமும் கடாபியுடன் கூடி குலாவி நட்பு பாராட்டிகொண்டிருந்த உலக தலைவர்கள் எவரும் கண்டனம் தெரிவிக்காமல் மௌனம் காப்பது நீதி உறங்கிவிட்டது என்பதையே உணர்த்தி நிற்கிறது. 
உலக நாடுகள் இன்று போரியல் விதிகளையும் தமது நாடுகளுக்கிடையேயான உறவுகளையும் சுய இலாப நோக்கில் கையாள்வது ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஆட்சி, அரசியல், அதிகாரம் போன்றவற்றில் நிச்சயமாக தளம்பல் நிலையை தோற்றுவிக்கும். இன்று மௌனம் காக்கும் எவரும் தமக்கும் இந்நிலை ஏற்படலாம் என்பதையும் நினைவில் நிறுத்தவேண்டிய தேவை உள்ளது. பல நிகழ்வுகளுக்கு நீதி உறங்குகின்ற போதும் காலம் பதில் கூற தவறுவதில்லை. இன்று நடந்துள்ள இந்த லிபிய புரட்சிகூட முடிந்துவிட்ட ஒன்று அல்ல. லிபியாவில் ஆட்சி அதிகார போட்டி அதை அனைவருக்கும் புரியவைக்கும். அதேபோல் இன்றைய இந்த கிளர்ச்சியின் முடிவுகள் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாடுகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான செயற்பாடுகளிலும் நிச்சயம் செல்வாக்கு செலுத்தும். இப்போது மௌனம் காக்கும் உலக நாடுகள், அமைப்புக்கள் எதற்கும் இனி வரும் காலங்களில் ஏற்படும் நிகழ்வுகளின் போதும் கருத்து வெளியிடும் அருகதை இருக்காது என்பதே உண்மை.
நீதி சில நேரங்களில் உறங்கிபோகலாம், ஆனால் சாவதில்லை. 

கேணல் கடாபியின் இறுதிக்கணங்கள் 




வடிவமைப்பும் உருவாக்கமும்
அமர்நாத்.க.க.

No comments:

Post a Comment